மும்பை: பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் நடித்த ‘ஆதிபுருஷ்’ படம், கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. இதை ஓம் ராவத் இயக்கியுள்ளார். இப்படம் குறித்து சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தொடர்ந்து எல்லா இந்து தெய்வங்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. ராமரின் மென்மையான முகத்தையும், ஹனுமான் பக்தியில் மூழ்கியதையும் நாங்கள் பார்த்தோம், ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த உருவத்தை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுவயதில் இருந்தே ஹனுமான் ஞானம், சக்தி மற்றும் பக்தியின் அடையாளமாக அறிமுகம் செய்யப்படுகிறார். ஆனால், இப்படத்தில் ராமர் போர் வீரனாகவும், ஹனுமான் கோபமான பறவையாகவும் காட்டப்படுகிறார்.
படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வசனங்களும், மொழியும் அநாகரிகமாக இருக்கிறது. துளசிதாஸ் எழுதிய ராமாயணத்தில், ராமர் ‘மர்யதா புருஷோத்தம்’ என்று சித்தரிக்கப்பட்டு, கண்ணியமான மொழி பயன்படுத்தப்பட்டது. ‘ஆதிபுருஷ்’ படத்தில், கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கின்றன. ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது, ராமாயண காவியத் தொடரை உருவாக்க ராமானந்த் சாகரிடம் பரிந்துரைத்தார். அது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ராமர் மற்றும் ஹனுமானை மோசமாக சித்தரித்துள்ள இப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தால், அரசாங்கம் தடை குறித்து யோசிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.