சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் நடந்தது. அப்போது நடிகர், நடிகைகளின் கால்ஷீட் பிரச்னைகளை தீர்க்க, தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தனி குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதோடு, படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல், தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து பண இழப்பு ஏற்படுத்தி வரும் நடிகர், நடிகைகள் 5 பேருக்கு தடை விதிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி, பொதுச்செயலாளர் பைவ் ஸ்டார் கதிரேசன், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர் கோவை சரளா, பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற தயாரிப்பாளர்கள், நடிகர்கள் யோகி பாபு, அதர்வா, ஜான் விஜய், சிம்பு, வடிவேலு, நடிகைகள் ராய் லட்சுமி, அமலா பால், சோனியா அகர்வால் உள்பட 15 நடிகர், நடிகைகள் மீது புகார் அளித்தனர். சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வரவில்லை; டப்பிங் பேச மறுத்தனர்; அதிக உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களை அழைத்து வந்து சம்பளம் கேட்டனர் என்பது போன்ற புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி சம்பந் தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு எழுத்துப்பூர்வமான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், அவர்களின் பதிலைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காவிட்டால், அவர்களுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிடவில்லை.