‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் டான்சிங் ரோஸ் கேரக்டரில் நடித்து கவனத்தை ஈர்த்த ஷபீர் கல்லாரக்கல், இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். கதைப்படி கார்கில் போரில் பங்கேற்ற இந்திய ராணுவ வீரரான அவர், தனது கர்ப்பிணி மனைவி மிர்னாவை சுகப்பிரசவத்துக்காக அடர்த்தியான காட்டுக்குள் இருக்கும் இயற்கைப் பிரசவ மையத்துக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு மிர்னாவுக்கு இயற்கை முறையில் பிரசவம் நடக்க சில விசேஷ பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
ஆனால், மிர்னாவுக்கு அந்தப் பிரசவ மையத்தின் செயல்பாடுகள் மீது சந்தேகமும், அதீத பயமும் ஏற்படுகிறது. ஷபீர் கல்லாரக்கல்லுக்கோ தன் மனைவி வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதுதானா என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது. இவ்விரு சந்தேகங்களுக்கு தீர்வு என்ன
என்பதுதான்மீதி கதை.
சில கேரக்டர்களை மட்டுமே வைத்துக்கொண்டு, இயற்கைப் பிரசவத்தின் மகிமையை திரில்லர் அனுபவத்துடன் சொல்லியிருக்கிறார், இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன். தனி நபராக முழு படத்தையும் தாங்கிப் பிடித்துள்ளார், மிர்னா. நிறைமாத கர்ப்பிணிக்கான வலியை தன் முகம் மற்றும் உடல்மொழியில் கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். தனக்கு ஏற்படும் சந்தேகம் மற்றும் பயத்தை ஆடியன்சுக்கும் சேர்த்து கடத்துகிறார். பதற்றம் நிறைந்த ராணுவ வீரராக அலைபாய்ந்து கொண்டிருக்கிறார், ஷபீர் கல்லாரக்கல்.
இயற்கைப் பிரசவ முறைகள் எப்படி என்பதை படம் விரிவாகச் சொல்லியிருக்கிறது.விஷால் சந்திரசேகர் பின்னணி இசையும், உதய் தங்கவேல் ஒளிப்பதிவும் இப்படத்துக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளன. கதை ஒரே இடத்தில் இருந்தபடி நகராதது, ஒருசில கேரக்டர்களே அடிக்கடி இடம்பெறுவது, திடீரென்று வரும் தொடர்பில்லாத காட்சிகள் படத்தின் நோக்கத்தை திசை திருப்புகிறது. பிரசவ மையத்திலுள்ள பணியாளரிடம் ஷபீர் கல்லாரக்கல் ஏன் இவ்வளவு வன்மம் காட்டி கொல்ல வேண்டும் என்பதற்கு வலுவான காரணம் இல்லை. மாறுபட்ட முயற்சி என்றாலும், படத்தை இன்னும் கூட சுவாரஸ்யமாக வழங்கியிருக்கலாம்.