ஜெருசலேம்: இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பயங்கரமான போர் நடந்து வரும் நிலையில், பாலிவுட் நடிகை நுஸ்ரத் பருச்சா இஸ்ரேலில் சிக்கியிருப்பது தெரியவந்தது. அவருடன் சென்ற ஒருவர் வெளியிட்டிருந்த வீடியோ பதிவில், ‘நடிகை நுஸ்ரத் பருச்சா இஸ்ரேலில் சிக்கியுள்ளார். அவர் ஹைஃபா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக அங்கு சென்றிருந்தார். கடைசியாக இன்று மதியம் 12.30 மணியளவில் (நேற்று முன்தினம்) அவரை நாங்கள் தொடர்புகொண்டோம். அப்போது அவர் பாதாள அறைக்குள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவரால் உடனடியாக வெளியே வர முடியாது. ஆனால், அதற்குப் பிறகு அவரை நாங்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை இந்தியாவுக்கு பாதுகாப்பாக அழைத்து வர தீவிர முயற்சிகள் செய்து வருகிறோம். அவர் நலமுடனும், பாதுகாப்பாகவும் திரும்புவார் என்று உறுதியாக நம்புகிறோம்’ என்று கூறியுள்ளார். இந்நிலையில், நுஸ்ரத் பருச்சா பற்றி தகவல் கிடைத்தது.
அதன்படி, அவர் மிகவும் பாதுகாப்பாக இருக் கிறார் என்றும், இஸ்ரேல் பகுதியில் இருந்து வெளியேற அங்குள்ள விமான நிலையத்தை நுஸ்ரத் பருச்சா அடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் அவர் மும்பை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தூதரகத்தின் உதவியுடன் நுஸ்ரத் பருச்சா அவரது வீட்டுக்குப் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார் என்றும் கூறப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தங்கி இருக்கும் இடத்தைப் பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. இந்நிலையில், நேற்று அவர் பத்திரமாக மும்பைக்கு திரும்பி வந்து இருக்கிறார்.