ஐதராபாத்: வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் நாகசைதன்யா, கிரித்தி ஷெட்டி நடித்துள்ள ‘கஸ்டடி’ படத்துக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 12ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது சமந்தாவுடனான விவாகரத்து பற்றி நாகசைதன்யா கூறியிருப்பதாவது: நாங்கள் பிரிந்து வந்து 2 வருடங்களாகி விட்டது. முறைப்படி விவாகரத்து செய்து ஒரு வருடமாகி விட்டது. நாங்கள் இன்று அவரவருக்கான வாழ்க்கைக்கு நகர்ந்து சென்றுவிட்டோம். எங்களின் திருமண வாழ்க்கை மீது அதிக மரியாதை இருக்கிறது. சமந்தா இனிமையானவர்.
அவர் அனைத்து மகிழ்ச்சிக்கும் தகுதியான ஒருவர். சமூக வலைத்தளங்களில் வெளியான வதந்திதான் பிரச்னைக்கு காரணம். முதலில் அதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பிறகு அது கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றது. ஊடகங்கள் வதந்திகளைப் பரப்பும்போது அது இன்னும் அதிகமான குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அது மக்கள் பார்வையில் பரஸ்பர மரியாதையைப் பறிக்கிறது. அதைத்தான் மோசமாக உணர்கிறேன். எங்கள் நலம் விரும்பிகளுக்கு ஒன்று சொல்கிறேன். ஆழ்ந்த சிந்தனைகளுக்குப் பிறகே நாங்கள் நிரந்தரமாகப் பிரிவது குறித்து முடிவு செய்தோம்.