சென்னை: ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை லைகா தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் கேப்டன் மில்லர். சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் இந்த வருடத்தில் வெளியாகும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.
இந்த படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகி வருகிறது. நடிகர் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதிரடி காட்சிகளால் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 15ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதுவே, தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படமென்பது குறிப்பிடத்தக்கது.