திருமலை: தெலுங்கு நடிகர் வருண்தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது. தெலுங்கு திரைப்பட மெகாஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாகேந்திர பாபு. இவரது மகன் நடிகர் வருண்தேஜ். தெலுங்கு பட நடிகை லாவண்யா திரிபாதி. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இதையறிந்த இருவரின் குடும்பத்தினர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். இவர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் மாலை நாகேந்திர பாபு வீட்டில் பிரமாண்டமாக நடந்தது.
இதில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் குடும்பத்தினர், லாவண்யா திரிபாதி குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 6 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த மிஸ்டர் படத்தில் வருணும், லாவண்யாவும் முதல்முறையாக இணைந்து நடித்தனர். இப்படத்தின் மூலம்தான் அவர்களுக்குள் நட்பு உருவானது. அதற்கு அடுத்த ஆண்டு மீண்டும் அந்தாரிக்ஷம் படத்தில் இணைந்து நடித்தனர். அன்று முதல் இவர்களின் நட்பு காதலாக மாறியது குறிப்பிடத்தக்கது.