திரைப்படம் இயக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறார், சச்சின். அது தயாரிப்பாளருக்குப் பிடித்துவிட, உடனே அட்வான்ஸ் கொடுத்து, படப்பிடிப்புக்கான பணிகளை ஆரம்பிக்கச் சொல்கிறார். கதை விவாதம் நடத்தவும், பிரீ-புரொடக்ஷன் பணிகளை கவனிக்கவும், அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு ஒரு பிளாட்டில் தனது குழுவினருடன் சச்சின் குடியேறுகிறார். ஒருநாள் இரவு அவர் தனிமையில் இருக்கும்போது, அமானுஷ்ய கனவு வருகிறது. அது, அவரது உயிரை அவரே மாய்த்துக்கொள்ளும் விதமாக இருக்கிறது. ஒருகட்டத்தில் கனவு நிஜமாகத் தொடங்குகிறது. அவரது கனவில் தோன்றிய வடநாட்டு குடும்பம், ஒட்டுமொத்தமாக தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்துக்கும், சச்சினுக்கும் என்ன தொடர்பு? இப்பிரச்னையில் இருந்து அவர் மீண்டாரா என்பது கிளைமாக்ஸ்.
இயக்குனராக வேண்டும் என்ற கனவில் தவிக்கும் இளைஞன் கேரக்டருக்கு சச்சின் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். கனவில் வந்தது நிஜத்தில் நடந்துவிடுமோ என்ற பதற்றத்தை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது ஜோடியாக வரும் அபர்ணதியை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். வழக்கமான நண்பராக கும்கி அஸ்வின் நடித்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லராக படத்தை நகர்த்திய இயக்குனர் ரமேஷ் பழனிவேல், வழக்கமான பேய்ப் படங்களின் காட்சிகளைத் தவிர்த்துள்ளார். பிற்பகுதியில் வடநாட்டு குடும்பம் எடுக்கும் விபரீத முடிவு உளவியல் சார்ந்தது. முற்பகுதியில் விறுவிறுப்பான காட்சிகள் இல்லை. ஆர்.எஸ்.ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவும், ரோனி ரஃபேலின் பின்னணி இசையும் படத்துக்கு பெரிய பலம்.