கராச்சி: பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்களுக்கு காரணமான இந்திய பிரதமர் மோடி மற்றும் ‘ரா’ மீது வழக்கு தொடர விரும்புகிறேன் என்று பாகிஸ்தான் நடிகை வெளியிட்ட பதிவுக்கு டெல்லி காவல்துறை பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) தலைவருமான இம்ரான் கான் நேற்று ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன. வன்முறைப் போராட்டங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வேகமாக பகிரப்படுவதால், பாகிஸ்தான் முழுவதும் மொபைல் பிராட்பேண்ட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தானின் பிரபல நடிகை ஷேகார் ஷின்வாரி என்பவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தானில் தீவிரவாதத்தை பரப்பிவரும் இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய உளவு அமைப்பான ‘ரா’ மீது புகார் அளிக்க விரும்புகிறேன். இதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் எனக்கு அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. டெல்லி காவல்துறையின் ஆன்லைன் புகார் தளத்தின் முகவரி யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்’ எனக்கூறி, இந்தப் பதிவை டெல்லி காவல்துறைக்கு ‘டேக்’ செய்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள டெல்லி காவல்துறை, நடிகை ஷேகார் ஷின்வாரியை கிண்டல் செய்துள்ளது.
அதாவது டெல்லி காவல்துறை வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தான் எங்களது அதிகார வரம்புக்குள் வரவில்லை. உங்களது நாட்டில் இணையம் வசதிகள் முடக்கப்பட்டிருக்கும் போது, நீங்கள் மட்டும் எப்படி டுவிட்டரில் பதிவிடுகிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.