சென்னை: பூஜா நடிப்பில் வெளியான ‘விடியும் முன்’ படத்தை தொடர்ந்து பாலாஜி கே.குமார் இயக்கத்தில், இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் அன்ட் லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம், ‘கொலை’. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளனர். வரும் 21ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் பேசியதாவது: ‘கொலை’ படத்தின் டிரைலர் அருமையாக இருந்தது. சினிமா என்பது கூத்து என்ற கலையில் இருந்து வந்தது. இங்கு சினிமா என்ற கலையைப் புரிந்துகொண்டு இயங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. என்னைப் பார்ப்பவர்கள், ‘அடுத்து என்ன சார், கொலை படமா?’ என்று கேட்பார்கள்.
அப்படி என் படங்களை அவர்கள் சுருக்கிவிட்டார்கள். ‘கொலை’ என்ற இப்படத்தின் டைட்டில் எழுத்து வடிவத்துக்காக இயக்குனர் அதிகமாக மெனக்கெட்டுள்ளார். ஒரு நல்ல இயக்குனர், தனது படத்தலைப்பின் எழுத்து வடிவம் மூலம் பார்வையாளர்களுக்கு கதை சொல்ல முடியுமா என்று யோசிப்பான். ஒரு மனிதன் ஏன் கொலை செய்கிறான்? உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டுள்ள ஒருவனின் வலியை எப்படி புரிந்துகொள்வோம்? அந்த இடத்துக்கு ஒரு மனிதன் உந்தப்படுவான் என்றால், அவன் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளான் என்று அர்த்தம். அது ஏன் என்று யோசிப்பவர்களால்தான் இதுபோன்ற படங்களை உருவாக்க முடியும்.
அந்தவகையில் இயக்குனர் பாலாஜி குமாருக்கு நன்றி. தொடர்ந்து அவர் கொலை படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். என்னிடம், ‘ஜாலியான ரெமான்டிக் காமெடி படங்கள் இயக்க மாட்டீர்களா?’ என்று கேட்கிறார்கள். அப்படிச் செய்வதற்கு நான் தற்கொலை செய்துகொள்வேன். அது எனக்கு சலிப்பு ஏற்படுத்தும். ஒவ்வொரு கொலை படத்திலும் ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ஒரு மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமல் இறுக்கமாக இருக்கிறது. அதுபற்றி விசாரிக்கும் இயக்குனர், அதை ஒரு சிறந்த படமாக கொடுக்கும்போது, அது மிகப்பெரிய வெற்றிபெறும் என்பதில் சந்தேகம் இல்லை.