சென்னை: ஒரு இயக்குனருக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும் என்பதற்காக திருப்பதி மலையேறி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த இயக்குனர் அதே கண்கள், பெட்ரோமாக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய ரோகின் வெங்கடேசன். இவர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் ‘தீராக் காதல்’. இதில் ஐஸ்வர்யாவுடன் ஜெய், ஷிவதா, அஜ்மல் நடித்துள்ளனர். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: எல்லா கதைக்கு பின்னாடியும் சில கதைகள் இருக்கும். இந்த படத்தின் கதைக்கு பின்னாலும் சில கதைகள் இருக்கிறது. இந்த கதைக்கு பின்னால் நாங்கள் 3 வருடம் பயணம் செய்திருக்கிறோம். இதுபோன்ற வலுவான கதைக்கு தயாரிப்பாளர் கிடைப்பது கடினம். இருந்தாலும் எனது நீண்ட நாள் நண்பரான லைகா நிறுவனத்தின் தமிழ்குமரனுக்கு இந்த கதையை அனுப்பி வைத்தேன். நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டுமே என்பதற்காக வேண்டுதல் செய்து நானும், இயக்குனரும் திருப்பதிக்கு நடந்தே சென்று வழிபட்டோம்.
அந்த பயணத்தின்போதே லைகா நிறுவனம் எங்கள் படத்தை தயாரிக்கும் செய்தி வந்தது. அந்த பயணத்தால் நான் இடுப்பு வலியால் மிகவும் அவதிப்பட்டேன். இந்த படத்தின் கதை எல்லோரையும் இணைக்க கூடியது. எனக்கும் நடந்த கதைதான் இது. முக்கோண காதல் பற்றி நிறைய படம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த படத்தின் காதல் எந்த பூச்சும் இல்லாத நிஜ காதலை பேசுகிறது. நான் காதல் கதைகளில் அதிகம் நடித்ததில்லை. இந்த படம் எனக்கு புது அனுபவத்தை தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.