சென்னை: பூஜா நடித்த ‘விடியும் முன்’ என்ற படத்தை தொடர்ந்து பாலாஜி கே.குமார் இயக்கியுள்ள படம், ‘கொலை’. இப்படம் நாளை திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். படம் குறித்து விஜய் ஆண்டனி கூறியதாவது: கதை சொல்லும்போது, படத்தில் 2 கதாநாயகிகள் என்று இயக்குனர் சொன்னார். மீனாட்சி சவுத்ரி இன்னொருவருக்கு ஜோடி. ரித்திகா சிங் எனக்கு தங்கை மாதிரி. படத்தில், எனக்கு மனைவி இருக்கிறார் என சொன்னார். அந்த கேரக்டர் எப்போதுமே என் மீது கோபத்தில் எரிந்து விழும்.
இப்படி ஒவ்வொரு படத்திலும் என்னை ரொமான்ஸ் செய்யவிடாமல் சில இயக்குனர்கள் தடுத்துவிடுகின்றனர் (சிரிக்கிறார்). நான் நடிப்பில் பிசியானதால், மியூசிக் டைரக்டர் விஜய் ஆண்டனிக்கு இடைவெளி விட்டுள்ளேன். சினிமாவில் எனது பயணத்தை முடிப்பதற்கு முன்பு, 20 மியூசிக் டைரக்டர்களை அறிமுகப்படுத்த ஆசைப்படுகிறேன். அதனால்தான் இசை அமைப்பதில் இருந்து விலகியிருக்கிறேன். எனது ‘கொலை’ படத்துக்கான புரமோஷனில் ஆர்யா கலந்துகொண்டு என்னையும், படக்குழுவினரையும் நெகிழவைத்து விட்டார்.