பாலிவுட் மட்டுமின்றி, தென்னிந்திய மொழிகளிலும் கணிசமான படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. தமிழில் ரஜினிகாந்துடன் ‘ஜெயிலர்’, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகிறது. இதனால் பெருமகிழ்ச்சியுடன் காணப்படும் அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ‘சின்ன வயதிலிருந்தே நான் சரியாக சாதம் சாப்பிடுவதில்லை. இதனால் அம்மா என்மீது கோபப்படுவார். இப்போது கூட நான் மதிய உணவு சாப்பிடுவதில்லை. இந்த விஷயம் அம்மாவுக்கு தெரியாது. படப்பிடிப்பில் மதிய உணவை ‘கட்’ செய்தால், நிறைய காபி குடிப்பேன். நான் எங்கு சென்றாலும், காபி தயாரிக்கும் மெஷின் கூடவே வரும்.
எனது ஓய்வுநேரத்தில் ஒரு காகிதம் கிடைத்தால் போதும், ஏதாவது ஒன்றை யோசித்து எழுதுவேன். எனக்குள் ஒரு கதாசிரியை மறைந்திருக்கும் விஷயம் யாருக்கும் தெரியாது. பிற்காலத்தில் கதை எழுதி படம் இயக்குவேனா என்று கேட்காதீர்கள். அதுபற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. ஜோதிடத்தில் எனக்கு வலுவான நம்பிக்கை இருக்கிறது. 8 என்ற எண் எனக்கு ராசியில்லை. இது துரதிருஷ்டமான நம்பர் என்று நினைக்கிறேன். கசப்பான அனுபவங்களால் அந்த எண்ணம் வலுவடைந்தது. நியூமராலஜிஸ்ட் ஆலோசனைப்படி எனது பெயரில் ஏ, ஹெச் ஆகிய எழுத்துகளை கூடுதலாகச் சேர்த்த பின்பு, உண்மையிலேயே எனக்கு அதிர்ஷ்டம் தேடி வந்தது’ என்று கூறியுள்ளார்.