சென்னை: இயக்குநர் வி.இசட்.துரை இயக்கத்தில், சுந்தர்.சி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தலைநகரம் 2’. இதில் நாயகியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். ரைட் ஐ தியேட்டர்ஸ் சார்பில் பிரபாகரன், வி.இசட்.துரை இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இயக்குநர் வி.இசட்.துரை பேசுகையில், ‘நான் யாரிடமும் துணை இயக்குநராகப் பணி புரியவில்லை. என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் சக்கரவர்த்தி சார் அவருக்கு நன்றி. அவர் பலருக்கு அறிமுகம் கொடுத்துள்ளார். சுந்தர்.சி சார் தான் எனக்கு ஆசிரியர். பல விஷயங்கள் அவரிடம் கற்றுக் கொண்டேன். அவருடன் பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
என்னுடைய படத்தில் கதையைக் கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டார்’ என்றார். இயக்குநர் சசி பேசுகையில், ‘நண்பன் துரையிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னுடைய படங்களில் எமோஷன் இருக்க அவருடன் பழகி கதையைப் பகிர்ந்து கொள்வதே காரணம். டிரைலரில் ஆக்ஷன் எல்லா காட்சிகளிலும் இருந்தது. ஆனால் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய எமோஷன் இருக்கும், எமோஷன் இல்லாத கதை கண்டிப்பாக ஜெயிக்காது. எமோஷன் இல்லாமல் துரை படமே செய்ய மாட்டார். அதனால் தான் 20 வருடங்களுக்கு மேலாகத் திரையில் இருக்கிறார். சுந்தர்.சி எனக்கு மிகவும் பிடித்த கமர்ஷியல் இயக்குநர், இருவரும் சேர்ந்து படம் செய்துள்ளார்கள் கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்’ என்றார்.