புதுடெல்லி: மகாதேவ் பெட்டிங் ஆப்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் ரன்பீர் கபூர், அமலாக்கத்துறை முன் ஆஜராக இரண்டு வாரம் அவகாசம் கேட்டுள்ளார். இந்நிலையில் ஷ்ரத்தா கபூருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரசு எமிரேட்சை தலைமையிடமாக கொண்டு மகாதேவ் பெட்டிங் ஆப்ஸ் மூலம் ஒரே நாளில் ரூ.200 கோடி செலுத்திய விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்குபதிந்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஷ்ரத்தா கபூர் ஆகியோர் நேற்று டெல்லி அமலாக்க இயக்குநரகம் முன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் அமலாக்கத்துறை முன் ஆஜராவதற்கு இரண்டு வார கால அவகாசம் தேவை என்று ரன்பீர் கபூர் கேட்டுள்ளார். அதேநேரம் ஷ்ரத்தா கபூர் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே வழக்கில் நகைச்சுவை நடிகர் கபில் சர்மா, நடிகைகள் ஹுமா குரேஷி, ஹினா கான் ஆகியோரின் பெயரும் சேர்க்கப்பட்டதால், அவர்களுக்கும் வெவ்வேறு தேதிகளில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்வழக்கில் நடிகர்கள், நடிகைகள் விளம்பரம் செய்து கொடுத்ததாகவும், அதற்காக முறைகேடான முறையில் பணத்தை பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.