ஐதராபாத்: தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா (12) பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, பணமோசடி செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகேஷ் பாபு, நடிகை நம்ரதா சிரோத்கர் தம்பதியின் மகள் சித்தாரா கட்டமனேனி, 2022ல் வெளியான ‘சர்காரு வாரி பாட்டா’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தற்போது அவரது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டு, மர்ம நபர் ஒருவர் அந்தக் கணக்கில் இருந்து லிங்க்குகளை அனுப்பி, பணமோசடி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி நம்ரதா சிரோத்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சித்தாரா கட்டமனேனியின் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு குறித்து மாதப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மர்ம நபர் ஒருவர் சித்தாரா கட்டமனேனி பெயரில் கணக்கு உருவாக்கி, வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான லிங்க்குகளை அனுப்பியுள்ளார். இந்த லிங்க்குகளை யாரும் நம்ப வேண்டாம். விழிப்புடன் இருந்து, போலி அக்கவுண்ட்டை ரிப்போர்ட் செய்ய வேண்டும். மர்ம நபரை உடனே கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பதிவில், சித்தாரா கட்டமனேனியின் ஒரிஜினல் இன்ஸ்டாகிராம் ஐடி டேக் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.