யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றாமல், முதலில் சில குறும்படங்களை இயக்கி ட்ரையல் பார்த்த விக்னேஷ் ராஜா, தற்போது ‘போர் தொழில்’ என்ற புலனாய்வு திரில்லர் வகை படத்தை இயக்கியுள்ளார். சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், நிழல்கள் ரவி நடித்துள்ள இப்படத்துக்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். படம் குறித்து விக்னேஷ் ராஜா கூறுகையில், ‘புலனாய்வு பாணியில் உருவாக்கப்பட்டுள்ள திரில்லர் படமான இதைப் பார்க்க தியேட்டருக்கு வந்த ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு புத்திசாலித்தனமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் கதை அமைந்திருப்பதை ரசிகர்கள் உணர்வார்கள்.
பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தை அவமதிக்காமல் இப்படத்தின் திரைக்கதையை அடர்த்தியுடன் உருவாக்கியுள்ளேன். படத்தைப் பார்த்த பிறகு கதையைப் பற்றி விவரிக்காமல் விமர்சனம் செய்ய வேண்டும். சமூக வலைத்தளத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ள இந்த நேரத்தில் இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஏனெனில், முதல் நாளன்று முதல் காட்சியைப் பார்க்கும்போது கிடைக்கும் பரவச உணர்வு, ஐந்து நாட்களுக்குப் பிறகு படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்றார். இப்படம் இன்று ரிலீசாகிறது.