சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கனா, க.பெ.ரணசிங்கம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இண்டியன் கிச்சன், சொப்பன சுந்தரி, சமீபத்தில் வெளியான பர்ஹானா படங்கள் இந்த வகையை சேர்ந்தவை. இதுகுறித்து சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: 17 வயதில் திருமணமாகி, 20 வயதில் விவாகரத்து செய்து, 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு பெண் இத்தனை உயரத்துக்கு செல்ல முடியுமா என்பதை இந்த புத்தகத்தில் படித்தபோது எனக்கு என் தாய்தான் நினைவுக்கு வந்தார்.
சினிமாவுக்கு நான் வந்த ஆரம்ப கட்டத்தில், “நீயெல்லாம் என்ன செய்ய போகிறாய்” என்று பலரும் குறை சொல்லி வந்தார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து வந்ததற்கு என் தாயின் மன உறுதிதான் காரணம். நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் எனக்கு ஆண்கள் பிடிக்காது என நினைத்து கொள்ள வேண்டாம். நீங்கள் பெண்ணியவாதியா என்றுகூட கேட்டார்கள், அதெல்லாம் கிடையாது. ஆண்களிலும் தவறானவர்கள் உள்ளனர் பெண்களிலும் தவறானவர்கள் உள்ளனர். இவ்வாறு ஐஸ்வர்யா பேசினார்.