சென்னை: அரபி புரொடக்ஷன் சார்பில் ரஜீப் சுப்பிர மணியம், வியான் வென்ச்சர்ஸ் சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம், ‘பைண்டர்’. உண்மைச் சம்பவம் அடிப்படையில் உருவாகியுள்ள திரில்லர் படமான இதன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சார்லி, ‘இந்நிகழ்ச்சி என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. படத்தில் முன்னணி ஹீரோ இல்லை. கதைதான் ஹீரோ. அதனால்தான் நான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தேன். சூர்யபிரசாத்துடைய அற்புதமான இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இயக்குனர் வினோத் ராஜேந்திரன் கடுமையாக உழைத்துள்ளார். பிரசாந்த் வெள்ளிங்கிரி சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்’
என்றார். இக்கதையின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் சார்லி நடித்திருக்கிறார்.
முக்கிய வேடங் களில் சென்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், பிரானா நடித்து இருக்கின்றனர்.செய்யாத குற்றத்துக்காக நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்களை தேடிக் கண்டுபிடித்து, பிறகு அவர்களை நிரபராதிகள் என்று நிரூபித்து, அந்த நாட்டு அரசாங்கம் தரும் இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுத்தரும் அமெரிக்க நிறுவனத்தைப் பற்றிய சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் ‘பைண்டர்’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது விரைவில் திரைக்கு வருகிறது.