சென்னை: நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு எதிராக குஷ்பு கருத்து தெரிவித்தபோது, அதில் அவர் பயன்படுத்திய சேரி என்ற வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நான் சேரி என்ற வார்த்தையை பிரெஞ்சு மொழியிலிருந்து பயன்படுத்தினேன் என குஷ்பு பல்டி அடித்துள்ளார்.
‘லியோ’ திரைப்படத்தில் நடித்தது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். இந்நிலையில் அதில் நடிகை திரிஷா தொடர்பாக தகாத கருத்தை தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு எதிராக நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் இவருக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகன் என்று பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து நடிகை குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்தார். ‘உங்களைப்போல், சேரி மொழியில் என்னால் பேச முடியாது என்றும், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண்விழித்துப் பார்க்க வேண்டும்’ என்றும் பகிர்ந்தார். இந்நிலையில் குஷ்பு பதிவில் பயன்படுத்தப்பட்ட சேரி மொழி என்ற வார்த்தைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள குஷ்பு, ‘பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன். பிரெஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்பதை பயன்படுத்தினேன்’ என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நாலாபுறத்தில் இருந்தும் தனக்கு எதிர்ப்புகள் வருவதால் இதுபோல் குஷ்பு பல்டி அடித்திருக்கிறார் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.