சென்னை: மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு ஹீரோயினாக மாறியவர் கீர்த்தி சுரேஷ். அங்கு சில படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்த அவர், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். மறைந்த நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் அவர் நடித்த ‘மகாநடி’ என்ற தெலுங்கு படத்துக்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற அவர், தற்போது தனி ஹீரோயினாக மட்டுமின்றி, பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார். தெலுங்கில் சிரஞ்சீவி தங்கையாக ‘போலா சங்கர்’ படத்திலும், தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ேஜாடியாக ‘மாமன்னன்’ படத்திலும் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவியுடன் ‘சைரன்’ மற்றும் ‘ரிவால்வர் ரீட்டா’, ‘ரகு தாத்தா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், துபாய் தொழிலதிபர் ஒருவரை கீர்த்தி சுரேஷ் ரகசியமாக காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. சமூக வலைத்தளங்களில் நேரடியாக சில ரசிகர்கள் கீர்த்தி சுரேஷிடம், ‘உங்களுக்கு எப்போது திருமணம்? காதலன் யார்?’ என்று கேட்டனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, கீர்த்தி சுரேஷ் தானே முன்வந்து டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘ஹஹ்ஹஹ்ஹா… இந்த நேரத்தில் எனது அன்பான நண்பரை வதந்திகளில் இழுக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் திருமணம் செய்துகொள்ள இருக்கும் அந்த மர்ம மனிதரை, சரியான தருணத்தில் நானே வெளிப்படுத்துவேன். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள். ஆனால், இதுவரை யாரையும் நான் தேர்வு செய்யவில்லை’ என்று தெரிவித்துள்ளார். காதலன் இருக்கிறார் என்கிறாரா, இல்லை என்கிறாரா என்று ஒரே குழப்பமாக இருக்கிறதே என்று அவரது ரசிகர்களும், நெட்டிசன்களும் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.