சென்னை: விஜய் சேதுபதி கடந்த 2019ம் ஆண்டு முதல் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் என்னும் சமூக சேவை அமைப்பை நடத்தி வருகிறார், அந்த அமைப்பின் மூலம் இதுவரை 1.41 லட்சம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் வேலை வாய்ப்பு பெற்று பயன்பெற்றனர்.
விஜய்சேதுபதியின் அடுத்த கட்ட தொடர் முயற்சியாக அவரின் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசு பள்ளிகளை தேர்வு செய்து தத்தெடுக்க திட்டமிட்டுள்ளார். அங்கு பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவிட திட்டமிட்டு முதலாவதாக திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள பாலகனூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி பள்ளியை தேர்வு செய்துள்ளார்.
அங்கு பயிலும் மாணவர்களுக்கு தடையின்றி தொடர்ந்து கல்வி பெற தேவையான நோட்டு, புத்தகங்கள், உபகரணங்கள் மேலும் சில தேவையான பொருட்களை அளித்து அவர்களை தொடர்ந்து கல்வி பயிலும் வகையில் உதவ முன்வந்துள்ளார். வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கத்தின் நிறுவனர் வீரராகவன் மூலம் இந்நடவடிக்கைகளை விஜய் சேதுபதி மேற்கொண்டுள்ளார்.