சென்னை: ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனைக்கூட்டம் கடந்த 11ம் தேதியன்று டெல்லியில் நடந்தது. இதில், சினிமா தியேட்டர்களில் தின்பண்டங்களுக்கான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மாற்றம் நேற்று நாடு முழுவதும் தியேட்டர்களில் அமலுக்கு வந்தது. இதனால், தியேட்டர்களில் பாப்கார்ன், கோக் உள்ளிட்ட பண்டங்களுக்கான விலைகள் குறைந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதுபோல் நடக்கவில்லை. அந்த பண்டங்களுக்கான வரியை மட்டுமே 5 சதவீதமாக தியேட்டர்கள் குறைத்துள்ளன. ரூ.250க்கு விற்ற பாப்கார்ன், அதே விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். சென்னையிலுள்ள தியேட்டர் களில் டிக்கெட் கட்டணமாக ரூ.190 வசூலிக்கப்படுகிறது.
இது 2 வருடங்களுக்கு முன்பு ரூ.120 ஆக மட்டும்தான் இருந்தது. ஆனால், திடீரென்று இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. அப்போதே தியேட்டர்களுக்கு மக்கள் வருகை குறைந்தது. பெரிய ஹீரோக்களின் படங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகிறார்கள். மற்றபடி சிறு பட்ஜெட் படங்களை மக்கள் கண்டு கொள்வதே இல்லை. இதற்கு காரணம் டிக்கெட்டின் விலையும், அதைவிட அதிகமாக இருக்கும் தின்பண்டங்களின் விலையும்தான். சென்னை தியேட்டர்களில் பாப்கார்ன் ரூ.250 முதல் ரூ.450 வரை விற்கப்படுகிறது. பர்கர் ரூ.260. கோக் ரூ.230. ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் ரூ.140. ஹாட் காபி ரூ.110. சிக்கன் பஃப் ரூ.160. இதுபோன்ற விலையால் மக்கள் கடுமையாக அவதிப்படும் நிலையில், ஜிஎஸ்டி வரி குறைப்பு நிம்மதியை தரும் என்று மக்கள் நம்பினர்.
ஆனால், அதுபோல் நடக்கவில்லை. ‘4 பேர் கொண்ட ஒரு குடும்பம் தியேட்டருக்கு வரும்போது, ரூ.3 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த தொகையை நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடிக்கு 2 ஆண்டு களுக்கு சந்தாவாக செலுத்தி விட்டால், கணக்கு இல்லாமல் படங்களை பார்க்கலாம்’ என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அந்த நிலைக்குத் தான் தற்போது மக்களின் மனநிலையும் மாறியிருக்கிறது என்று திரையுலகினரும் ஒப்புக்கொள்கின்றனர். இதுகுறித்து தியேட்டர் அதிபர் கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில், ‘அரசு வரி குறைத்தால் தின்பண்டங்களின் விலையைக் குறைக்க முடியாத நிலையிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், அந்த தின்பண்டங்களின் தரம்தான்’ என்று சொன்னார்.