சென்னை: மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்க, ஹன்சிகா இரட்டை வேடத்தில் நடிக்கும் படம், ‘காந்தாரி’. வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் இப்படம், கமர்ஷியல் கலந்த ஹாரர் கதையுடன் உருவாகி வருகிறது. இந்து அறநிலையத்துறை அதிகாரியாக பணியாற்றும் இளம்பெண், பல காலத்திற்கு முன்பு ஒரு மன்னன் கட்டிய கந்தர்வக்கோட்டையை ஆராய்ச்சி செய்ய செல்கிறார்.
அங்குள்ள பொக்கிஷங்களை தேடும் அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அது என்ன என்பது சஸ்பென்ஸ். இதில் இந்து அறநிலையத்துறை அதிகாரி, நரிக்குறவப் பெண் ஆகிய இரட்டை வேடங்களில் ஹன்சிகா நடிக்கிறார். நரிக்குறவப் பெண்ணாக நடிக்க விசேஷ பயிற்சி பெற்றார்.
இப்படத்துக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 60 லட்ச ரூபாய் செலவில் பிரமாண்டமான மலைக்குகை அமைத்து, 1943ல் நடக்கும் பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டன. முக்கிய வேடங்களில் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், ஸ்டண்ட் சில்வா நடித்துள்ளனர். தொல்காப்பியனின் கதைக்கு தனஞ்செயன் திரைக்கதை எழுதியுள்ளார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீனி வசனம் எழுதியுள்ளார். எல்.வி.முத்து கணேஷ் இசை அமைத்துள்ளார்.