மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகை, சாந்தி பாலச்சந்திரன், ‘தரங்கம்’ படத்தில் அறிமுகமானாலும், லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’ படத்தின் மூலம் புகழ்பெற்றார். பிறகு ‘பாவம் செய்யாதவர் கல்லெறியத்தே’, ‘ரண்டு பேர்’, ‘சதுரம்’, ‘ஆஹா’ உள்பட சில படங்களில் நடித்தார். தற்போது ‘ஸ்வீட் காரம் காபி’ என்ற வெப்தொடரின் மூலம் தமிழுக்கு வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது பாட்டியாக லட்சுமி, அம்மாவாக மதுபாலா நடிப்பது என்று முடிவான பின்பு, அவர்கள் இருவருடைய முகச்சாயல் கொண்ட பேத்தி கேரக்டருக்கு ஒரு வருடமாக நடிகையைத் தேடி இருக்கின்றனர்.
கடைசியாக என்னைக் கண்டுபிடித்து ஆடிஷனுக்கு அழைத்தனர். பிறகு என்னை மட்டும் தேர்வு செய்தனர். இத்தொடரில் என் நடிப்பைப் பார்த்துவிட்டு நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், இதுவரை எந்தப் படத்திலும் நான் ஒப்பந்தமாகவில்லை. விரைவில் தமிழ்ப் படத்தில் நடிப்பேன்’ என்றார்.