முதல்முறையாக பத்திரிகையாளர்களை மோசமாகச் சித்தரித்து வெளியாகியுள்ள வெப்தொடர் இது. மதனபள்ளி என்ற நடுத்தர ஊரில் கதை நடக்கிறது. அந்த ஊரிலுள்ள இரண்டு அரசியல் கட்சிகளின் செல்லப்பிள்ளைகளாக இருந்துகொண்டு, அவர்கள் தூக்கி வீசும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது அங்குள்ள பிரஸ் கிளப். இரண்டு தரப்பு அரசியல்வாதிகளும் தாங்கள் செய்யும் தவறுகளை மறைக்க, சில பத்திரிகையாளர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
பத்திரிகையாளர் என்ற போர்வையில் அவர்களும் கட்டப்பஞ்சாயத்து செய்தல், அநீதிகளுக்கு உடந்தையாக இருத்தல், அப்பாவி மக்களிடம் சுரண்டுதல் என்று, எல்லா தவறுகளுக்கும் துணைநிற்கின்றனர். முதல் எபிசோடில் இருந்து 6வது எபிசோடு வரை இதுதான் கதை. இதற்கிடையே, தன் சொந்த நிலத்தை மீட்கப் போராடும் ஏழை விவசாயி திடீரென்று கொல்லப்படுகிறார். கட்-அவுட் மீது சாணத்தை வீசினாள் என்பதற்காக, ஒரு அரசியல்வாதியின் அடியாள் ஒரு சிறுமியின் கையை தீயிட்டுப் பொசுக்குகிறான். ஒரு அப்பாவிப் பெண்ணின் கணவன் அநியாயமாக கொல்லப்படுகிறான். இத்தனை விஷயங்களும் தெரிந்த பிறகும் கூட, 200 ரூபாய்க்கு செய்தி வெளியிடுகிறார்களாம் பத்திரிகையாளர்கள். இப்படியாக இத்தொடரின் முதல் சீசன் முடிந்துள்ளது.
இதில் பிரதீப், லஞ்சமாக வாங்கிய பணத்தில் தாதா மாதிரி வாழும் பத்திரிகையாளராக நடித்துள்ளார். அவரது காதலியாகவும், உள்ளூர் சேனல் நிருபராகவும் பிந்து மாதவி நடித்திருக்கிறார். பிரவீன் குமார் இயக்கியுள்ள இத்தொடர், ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகியுள்ளது.