சென்னை: வீரன் படம் குழந்தைகளுக்கு பிடித்த படமாக அமையும் என நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி கூறினார். ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியுள்ள புதிய படம் ‘வீரன்’. இதில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடித்துள்ளார். சத்ய ஜோதி நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. இதில் ஆதிரா ராஜ், வினய், முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்டு ஹிப்ஹாப் ஆதி பேசியதாவது: ‘வீரன்’ குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமையும்.
இதற்கு முன்பு என்னுடைய படங்கள் அப்படித்தான் என்றாலும், இதில் குழந்தைகளுக்கான விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் ஒரு 90’ஸ் கிட் என்பதால் எனக்கு சக்திமான் மிகவும் பிடிக்கும். அதுபோல, ‘வீரன்’ ஒரு தமிழ் சூப்பர் ஹீரோவாக நீண்ட காலத்திற்கு குழந்தைகளை மகிழ்விக்கும் படமாக இருக்கும். உடல் ரீதியாகவும் மிகவும் சவாலாக இந்த படம் இருந்தது. இதற்கு முன்பு நான் இது போன்ற ஆக்ஷன் காட்சிகளை செய்ததில்லை. நான் இதுவரை நடித்த ஐந்து படங்களிலேயே இதுதான் பெரிய படம்.