சென்னை: ஆல்பா பிரேம்ஸ் சார்பில் அறிவழகன், 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து தயாரித்துள்ள படம், ‘சப்தம்’. இதற்கு முன்பு ‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’ ஆகிய திரைப்படங்களையும், ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற வெப்தொடரையும் இயக்கியிருந்த அறிவழகன் தற்போது இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ‘ஈரம்’ படத்துக்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரது இயக்கத்தில் ஆதி நடித்துள்ளார். மற்றும் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, ராஜீவ் மேனன், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளனர்.
‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் அறிவழகனுடன் இணைந்து இசை அமைப்பாளர் தமன் பணியாற்றியுள்ளார். ஹாரர் திரில்லர் கதை கொண்ட இப்படம் குறித்து அறிவழகன், ஆதி ஆகியோர் கூறியதாவது: ‘ஈரம்’ படம் முழுக்க மழை மற்றும் மழை சார்ந்த காட்சிகளை மையப்படுத்தி உருவானது. தண்ணீரின் வழியாக பேய் வரும். ‘சப்தம்’ படத்தில் மலை மற்றும் குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி காட்சிகள் உருவாகியுள்ளன.
முக்கியமாக, சப்தத்தை மையப்படுத்தி நிறைய காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மும்பை, மூணாறு, சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இடைவேளை மற்றும் கிளைமாக்சுக்காக 2 கோடி ரூபாய் செலவில், 120 வருட பழமையான கல்லூரி நூலகம் போன்ற பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்.
சவுண்ட் எபெக்ட்ஸ் மற்றும் விஷூவல் எபெக்ட்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை உருவாக்கியுள்ளோம். பின்னணி இசைக்காக தமன், ஹங்கேரி சென்றார். ‘மகாமுனி’ அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்ய, ‘வல்லினம்’ படத்துக்காக தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் எடிட்டிங் செய்துள்ளார். சிம்ரன், லைலா, லட்சுமி மேனன் ஆகியோர் ஏற்றுள்ள கதாபாத்திரங்களை வேறெந்த படத்திலும் ஆடியன்ஸ் பார்த்திருக்க முடியாது. கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டர் கேரக்டரில் ஆதி நடித்துள்ளார்.