ஐதராபாத்: ‘பாகுபலி வந்திருக்காவிட்டால் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக உருவாக்க யோசித்திருக்க மாட்டேன்’ என்றார் இயக்குனர் மணிரத்னம். பொன்னியின் செல்வன்-2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மணிரத்னம் பேசியதாவது: பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் ஆவல் பல ஆண்டுகளாக இருந்தது. ஆனால் அதற்கான முயற்சி, திட்டமிடல் இல்லாமல் இருந்தது. காரணம், இதன் பட்ஜெட்தான். அதனால் இந்த படத்தை நான் உருவாக்குவேனா என்பது எனக்கு கூட தெரியாது. இப்படியொரு சூழலில்தான் பாகுபலி என்ற படத்தை சரித்திர பின்னணியில் மிக துணிச்சலாக எடுத்தார் ராஜமவுலி. அந்த படம் ஏற்படுத்திய தாக்கம், என்னை ஆச்சரியப்படுத்தியது.
அந்த படம் கொடுத்த தைரியத்தால்தான், பொன்னியின் செல்வன் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது. அதற்கான திட்டமிடல், முயற்சிகளை தொடங்கினேன். அதேபோல் பாகுபலி இரண்டு பாகமாக வந்ததும் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாக்க ஊந்துகோலாக இருந்தது. ராஜமவுலி சர்வதேச கதவுகளை தென்னிந்திய படங்களுக்காக திறந்து விட்டிருக்கிறார். இதை அவரிடம் தொலைபேசியில் முதல்முறையாக பேசியபோதும் சொன்னேன். நேரில் பார்த்தபோதும் சொன்னேன். அவருக்கு நன்றிகள். அதேபோல் இதில் நடித்த அனைத்து நட்சத்திரங்கள், பணியாற்றிய டெக்னீஷியன்கள், லைக்கா நிறுவனம் உள்பட படக்குழுவுக்கு நன்றி. கமல் நடிப்பில் நான் இயக்கும் படம் சரித்திர கதை கிடையாது. அது பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. இவ்வாறு மணிரத்னம் கூறினார்.