டி.வியில் இருந்து சினிமாவுக்கு வந்துள்ள குமார் கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘ஈடாட்டம்’. கதை எழுதி ஈசன் இயக்கியுள்ளார். திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மேற்பார்வை ஆகிய பொறுப்புகளை கஜபதி ஏற்றுள்ளார். முக்கிய வேடங்களில் ராஜசூர்யா, வெண்பா, அனு கிருஷ்ணா, தீக்ஷிகா, விஜய் விசித்திரன், காதல் சுகுமார், டாக்டர் சீனிவாசன், பூவிலங்கு மோகன், புலிக்குட்டி, விஜய் சத்யா, சாந்தி ஆனந்த் நடித்துள்ளனர். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஜான் பீட்டர் இசை அமைத்துள்ளார். புலனாய்வு திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை ஈசன் மூவிஸ் சார்பில் சக்தி அருண் கேசவன் தயாரித்துள்ளார்.
படம் குறித்து ஈசன் கூறுகையில், ‘குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களின் உளவியலை புதுமையான கோணத்தில் அணுகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. கதையின் நாயகன் ஒரு பணக்காரப் பெண் வீட்டில் கார் டிரைவராக குறைந்த சம்பளத்துக்குப் பணியாற்றுகிறார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால், தனது பணத்தேவைக்காக ஆங்காங்கே திருடுகிறார். பிறகு பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார். இந்நிலையில், திடீரென்று மூவர் படுகொலை செய்யப்படுகின்றனர். அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து தப்பித்தாரா என்பது கதை’ என்றார்.