மும்பை: 10 மொழிகளில் உருவாகும் ‘கங்குவா’, பான் இந்தியா படமாக உருவாகும் ‘புறநானூறு’ ஆகிய படங்களை தொடர்ந்து சூர்யா நேரடி இந்திப் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இதில் சூர்யா ஜோடியாக ஜான்வி கபூர் நடிப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையா என்பது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் புதிய தகவல் அளித்துள்ளார். பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இப்படம் மகாபாரதத்தை தழுவி உருவாகிறது என்றும், ‘கர்ணா’ என்று தலைப்பு சூட்டப்படும் என்றும், ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. இத்தகவல்களை உறுதி செய்யும் வகையில் தயாரிப்பாளரும், ஜான்வி கபூரின் தந்தையுமான போனி கபூர் பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘அடுத்து சூர்யாவுடன் ஜான்வி கபூர் ஒரு இந்திப் படத்தில் நடிக்கிறார்’ என்றார்.
இதை வைத்து, ‘ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ராவுடன் சூர்யா இணையும் படத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார்’ என்று ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் போனி கபூர் கூறுகையில், ‘தற்போது தெலுங்கில் உருவாகி, பிறகு பான் இந்தியா படமாக வெளியிடப்படும். ‘தேவரா’ என்ற 2 பாகங்கள் கொண்ட படத்தில், ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ராம் சரண் ஜோடியாக புதிய பான் இந்தியா படமொன்றில் ஜான்வி கபூர் நடிக்கிறார். மறைந்த என் காதல் மனைவி தேவி எப்படி பல மொழிப் படங்களில் நடித்து நிலையான புகழைப் பெற்றாரோ, அதுபோலவே என் மூத்த மகள் ஜான்வி கபூரும் பல மொழிப் படங்களில் நடித்து புகழ்பெறுவார் என்று நம்புகிறேன்’ என்றார். சமீபத்தில் எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் அளித்த பேட்டியில், ‘மகாபாரதத்தை மையப்படுத்தி உருவாக்கப்படும் இந்திப் படத்தை ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்று சொல்லியிருந்தார். அவர் மகாபாரதத்தை மையப்படுத்தி பல புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பதும், ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ராவின் படத்துக்கு அவர்தான் திரைக்கதை எழுதுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.