சென்னை: நயன்தாரா நடித்துள்ள படம், ‘அன்னபூரணி’. நாயகியை மையமாகக் கொண்ட இப்படத்தில் சத்யராஜ், ெஜய், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைத்துள்ளார். ஷங்கர் உதவியாளர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். வரும் டிசம்பர் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து நிலேஷ் கிருஷ்ணா கூறியதாவது: ரங்கத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பிராமணப் பெண், சமையல் கலையில் சாதிக்கத் துடிக்கிறாள். அப்படி சமையல் கலைஞரானால்
அசைவம் சமைக்க வேண்டும் என்பதால், அவளது ஆசைக்கு குடும்பம் தடை விதிக்கிறது. ஆனால், அதையும் மீறி அவள் எப்படி சாதிக்கிறாள் என்பது கதை. தந்தை, மகளுக்கு இடையிலான பாசத்துக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மகளாக நயன்தாரா, தந்தையாக அச்யுத் குமார் நடித்துள்ளனர். இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞராகவும், நயன்தாராவின் நண்பராகவும் ெஜய் நடித்துள்ளார்.அவருடைய தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார். இக்கதையை கடந்த ஆண்டே நயன்தாராவிடம் சொன்னேன். அவரும், ‘தொடர்ந்து ஆக்ஷன் திரில்லர் படங்களில் நடிக்கிறேன். இப்படம் அதற்கு மாறாக இருக்கிறது. அதனால், கண்டிப்பாக உங்களது படத்தில் நடிக்கிறேன்.
என் கைவசம் இருக்கும் படங்களை முடித்து தரும் வரை உங்களால் காத்திருக்க முடியுமா?’ என்று கேட்டார். அவருக்காக ஒரு வருடம் காத்திருந்து படமாக்கினேன். படத்தில் சாதி, மதம் குறித்து எதுவும் பேசவில்லை. மனித
நேயம், அன்பு மற்றும் சாதிக்கத் துடிக்கும் ஒரு பெண் சந்திக்கும் பிரச்னை குறித்து பேசியிருக்கிறேன். முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு, சில காட்சிகள் குறிப்பிட்ட பிரிவினரை புண்படுத்துவதாக இருக்கிறது என்றனர். முழு படமாகப் பார்க்கும்போது, அக்காட்சி எந்த உள்நோக்கமும் இல்லாதது என்றும், கதையுடன் இணைந்து வருவது என்றும் புரியும். முந்தைய நயன்தாராவின் படங்களிலிருந்து இது மாறுபட்டு இருக்கும். ஒவ்வொரு சமையல் கலைஞரையும் படம் பெருமைப்படுத்தும். சமையல் வெறும் கலை அல்ல, அது விவசாயம் போல் தெய்வீகமானது என்று இப்படத்தில் சொல்கிறோம்.