சென்னை: கார்த்தி நடித்துள்ள 25வது படம், ‘ஜப்பான்’. தீபாவளியை முன்னிட்டு நாளை திரைக்கு வருகிறது. ராஜூ முருகன் எழுதி இயக்கியுள்ளார். ஹீரோயினாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். படம் குறித்து நிருபர்களிடம் கார்த்தி கூறியதாவது:இதுவரை எந்த இயக்குனரிடமும், ‘எனக்கு ஒரு படம் இயக்குங்கள்’ என்று நான் கேட்டதில்லை. முதல்முறையாக ராஜூ முருகனிடம் கேட்டேன். அவர் இயக்கிய ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன்.
முதலில் அவர் அழுத்தமான ஒரு கதையுடன் வந்தார். ‘இந்தக் கதைக்கு நான் தாங்க மாட்டேன். எனக்கு ஏற்ற மாதிரி கமர்ஷியலாக ஒரு கதை எழுதுங்கள்’ என்று சொன்னேன். அதுதான் ‘ஜப்பான்’. அதாவது, ஜப்பான் என்பது என் கேரக்டரின் பெயர். ஜாலியான ஒரு திருடன் என்பதுதான் என் குணாதிசயம். அவன் எந்த நேரத்தில் என்ன செய்வான், என்ன பேசுவான் என்று யாருக்கும் தெரியாது. அதுதான் இந்த கேரக்டரின் ஸ்பெஷல். இது ஜாலியான படமாக இருந்தாலும், அதற்குள் சமூகத்துக்கு மிகவும் தேவையான ஒரு அழுத்தமான விஷயம் இருக்கிறது.
நான் சினிமாவுக்கு வந்து 20 வருடங்களாகி விட்டது. இதுவரை 25 படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். இது மிகவும் குறைந்த எண்ணிக்கைதான். இன்னும் கூடுதலாக நடித்திருக்கலாம் என்றாலும், அதை நான் விரும்பவில்லை. சினிமாவில் யாரும் என்னைத் தள்ளிவிடவில்லை. நானாக விரும்பியே இங்கு வந்தேன். எனவே, என் விருப்பப்படி நடந்துகொள்ள எனக்கு சுதந்திரம் இருக்கிறது. அதனால்தான் நல்ல கதைகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.
பிறகு அந்தக் கதைகளுக்கு உண்மையாக இருந்து நடிக்கிறேன். யாருக்காகவும், எதற்காகவும் கதை தேர்வில் சமரசம் செய்துகொள்வது இல்லை. அதனால்தான் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்திருக்கிறேன். திரைப்பட இயக்குனராக வேண்டும் என்று திரைத்துறைக்கு வந்தேன். ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் திடீரென்று நடிப்பின் பக்கம் வந்துவிட்டேன் என்றாலும், அந்த இயக்குனர் கார்த்தி விரைவில் வருவான். ஆனால், இப்போது இல்லை. காரணம், வரிசையாக எனக்கு நிறைய படங்கள் இருக்கின்றன. இயக்குனர் பொறுப்பைச் சுமக்கும் அளவுக்கு பலமும், நேரமும் அமையும்போது கண்டிப்பாக ஒரு திரைப்படம் இயக்குவேன்.