நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கும் பான் இந்தியா படம், ‘புராஜெக்ட் கே’. இதில் வில்லனாக நடிக்க கமல்ஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக அவருக்கு ₹150 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. படம் குறித்து கமல்ஹாசன் கூறுகையில், ‘அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கிறேன். எனது சக நடிகர்களான பிரபாஸ், தீபிகா படுகோன் ஆகிய இந்த தலைமுறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இதற்கு முன்பு அமித்ஜியுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன் என்றாலும், ஒவ்வொரு முறையும் அவருடன் இணைந்து பணியாற்றுவதை முதல்முறை போலவே உணர்கிறேன். இப்போதும் அமித்ஜி ஒவ்வொரு படத்திலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். அவரது பாதையையே நானும் பின்பற்றுகிறேன். ’புராஜெக்ட் கே’ படத்தில் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். திரையுலகில் எந்தவொரு முயற்சியை எடுத்தாலும், பார்வையாளர்கள் என்னை எந்த நிலையில் வைத்துப் பார்த்தாலும், எனது முதன்மையான தன்மை, நான் ஒரு திரைப்பட ஆர்வலன் என்பதே’ என்றார்.