சென்னை: சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான சித்தா படம் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை கர்நாடகத்தில் ரிலீஸ் செய்வதற்காக பெங்களூரில் அவர் பத்திரிகையாளர்களை சில நாட்களுக்கு முன் சந்தித்தார். அப்போது கன்னட அமைப்பை சேர்ந்த சிலர் அரங்கிற்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டு, சித்தார்த்தை வௌியேற்றினர். இந்நிலையில் சென்னையில் நேற்று சித்தா படத்தின் வெற்றி விழாவுக்கு பிறகு சித்தார்த் கூறியது: பெங்களூரில் அன்று பந்த் கிடையாது. மறுநாள்தான் பந்த்.
சித்தா படத்தை நான்தான் தயாரித்தேன். எனது வாழ்வாதாரத்துக்காக இந்த படத்தை புரமோட் செய்ய, பெங்களூரில் ஒரு சிறு ஆடிட்டோரியத்தை வாடகைக்கு எடுத்து செய்தியாளர்களை சந்தித்தேன். அது செய்யக் கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் பத்து பேர் திடீரென வந்து ரகளை செய்து, இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நிறுத்தியது, எனது வயிற்றில் அடித்தது போல் இருந்தது. காசு போட்டு பணம் எடுக்கத்தான் நாங்கள் சினிமா தயாரிக்கிறோம்.
இதுபோல் எங்கள் வயிற்றில் அடிக்கலாமா? மற்ற தயாரிப்பாளர்களுக்கு இதுபோல் நடக்கக் கூடாது என்பதற்காகவே இதை சொல்கிறேன். கன்னட மக்களுடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. கன்னட திரையுலகினருடனும் பிரச்னை இல்லை. அப்போது ஏன் இந்த 10 பேர் மட்டும் என்னை தடுக்க வேண்டும்? இந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்ட சிவராஜ்குமார் அண்ணாவுக்கும் பிரகாஷ் ராஜுக்கும் நன்றி.