சென்னை: ‘மகாநடி’ என்ற தெலுங்கு படத்துக்காக தேசிய விருது பெற்றவர், கீர்த்தி சுரேஷ். தமிழில் ‘ரிவால்வர் ரீட்டா’, ‘ரகு தாத்தா’, ‘சைரன்’, தெலுங்கில் ‘போலா சங்கர்’ ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், அடுத்து தமிழில் நடிக்கும் படம், ‘கண்ணிவெடி’. இதை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ‘ஜோக்கர்’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கைதி’ போன்ற படங்களை தொடர்ந்து இந்நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கணேஷ் ராஜ் இயக்குகிறார். திரில்லர் கதையுடன், ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட படமாக இது உருவாகிறது.
தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி மற்றும் அதையொட்டி சமூகத்தில் ஏற்படும் நன்மைகள், பிரச்னைகள் ஆகியவற்றை இப்படம் விரிவாகப் பேசுகிறது. சென்னையில் தொடக்க விழா பூஜை நடந்தது. எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், ‘எங்களின் ’கண்ணிவெடி’ படம் பரபரப்பான கதை சொல்லல் மற்றும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் இணையும் படமாகவும், ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் கதை கொண்ட படமாகவும் உருவாக்கப்படுகிறது’ என்றார்.