மும்பை: இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சூர்யாவின் 44வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யா 44 படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கவுள்ளதாகவும், இப்படத்தின் மூலம் சூர்யா இந்தியில் அறிமுகமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படம் மகாபாரத கதையாக உருவாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்திற்கு கர்ணா என்று பெயரிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் கர்ணனாக நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். தற்போது தனது பிள்ளைகளின் படிப்புக்காக மும்பையில் வசித்து வருகிறார் சூர்யா. அங்கேயே அவரை சந்தித்து ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இந்த படத்தை பற்றி பேசியிருக்கிறாராம். இதில் நடிக்க சூர்யாவும் ஆர்வம் காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. ஆமிர்கான் நடித்த ரங்தே பசந்தி படத்தை இயக்கியவர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.