சென்னை: கடந்த 2007ல் இந்தியில் வெளியான ‘பூஹ்ல் புலைய்யா’ என்ற படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இது சந்திரமுகி படத்தின் ரீமேக் ஆகும். கடந்த 2022ல் ‘பூஹ்ல் புலைய்யா’ படத்தின் 2ம் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. 2ம் பாகத்தில் கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வானி, தபு நடித்திருந்தனர். அனீஸ் பாஸ்மி இயக்கினார். 60 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இப்படம், ரிலீசுக்குப் பிறகு 270 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.
அதற்கான உரிமையை ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்தியில் வெளியான ‘பூஹ்ல் புலைய்யா 2’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நான் வாங்கியுள்ளேன். இது, திரையில் மிகச்சிறந்த முறையில் சொல்லப்பட்ட நல்ல கதை என்று நம்புகிறேன். தமிழ் ரீமேக்கில் பங்கேற்கும் நடிகர்கள், இயக்குனர் குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை’ என்றார். கடந்த சில வருடங்களாக தென்னிந்தியப் படங்களை இந்தியில் ரீமேக் செய்து வந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திப் படம் ஒன்று தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.