சென்னை: ஜேஎஸ்பி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜேஎஸ்பி சதீஷ் தயாரித்து எழுதி இயக்கி நடித்துள்ள படம், ‘சிங்கப்பெண்ணே’. ஹீரோயினாக ஷில்பா மஞ்சுநாத், நிஜ டிரையத்லான் வீராங்கனை ஆர்த்தி நடித்துள்ளனர். மற்றும் சமுத்திரக்கனி, பிரேம் குமார், சென்ராயன், எம்.என்.நம்பியார் பேரன் தீபக் நம்பியார், ‘பாய்ஸ்’ ராஜன், ‘பசங்க’ சிவகுமார், ஏ.வெங்கடேஷ், ஜானகி, இந்துமதி நடித்துள்ளனர். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார். டிரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இசை அமைத்துள்ளார்.
விரைவில் திரைக்கு வரும் இப்படத்தில் கோச்சர் வேடத்தில் நடித்திருப்பது குறித்து ஷில்பா மஞ்சுநாத் கூறியதாவது:
இயக்குனர் என்னிடம் கதை சொன்னபோது, யார் சிங்கப்பெண் என்பது தெரிந்தது. அனைவரது வீட்டிலும் ஒரு சிங்கப்பெண் இருப்பார். அப்படிப்பட்ட ஒரு சிங்கப்பெண் பற்றிய படம் இது. என்னிடம் ஆறு மாதங்கள் கால்ஷீட் கேட்டவுடனே கொடுத்துவிட்டேன். உண்மையான போட்டிகளை நடத்தி படமாக்கினார்கள். ஆர்த்தி அதிகமான உற்சாகத்துடன் பணியாற்றினார். அவரது கடுமையான உழைப்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் பார்த்து எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. பெண்களின் விளையாட்டு குறித்து யாரும் அதிகமாக பேசுவதில்லை. இப்படம் திரைக்கு வந்த பிறகு அந்த எண்ணம் மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நானும் நிஜ விளையாட்டு வீராங்கனை என்பதால், ஆர்த்தியின் லட்சியமும், உழைப்பும் எனக்கு நன்கு புரிந்தது.