‘நினைவிருக்கா… அன்பே நினைவிருக்கா? இடமிருக்கா… நெஞ்சில் இடமிருக்கா’ என்ற பாடல் காட்சி, ‘நினைவிருக்கா’ என்ற ஆல்பத்துக்காக திரைப்பட வடிவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. கதை நாயகன் நிஜய், கதை நாயகி ஜாராவை விரும்புகிறார். ஆனால், அப்பெண் அவரை விரும்ப முடியாத சூழ்நிலையில் தவிக்கிறார். காரணம், அவரது பெற்றோர் மாற்றுத்திறனாளிகள் என்பதால், அவர்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார். இதை நிஜய் புரிந்துகொண்டு விலகுகிறார். அப்போது மற்றொரு பெண் அன்வித்தாவின் மானத்தைக் காப்பாற்றுகிறார். இதனால், திடீரென்று அன்வித்தாவுக்கு நிஜய் மீது காதல் ஏற்படுகிறது.
இதையறிந்த நிஜய், தான் நேசித்த ஜாரா கிடைக்கவில்லை. எனவே, தன்னை நேசிக்கும் அன்வித்தாவை ஏற்றுக்கொள்கிறார். இதை அடிப்படையாக வைத்து இப்பாடல் காட்சியில் கதை சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது வலைத்தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. லைவ் ஆர்ட்ஸ் மேக்கர்ஸ் தயாரிக்க, சிவபாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணி அமுதன் இசை அமைக்க, குமரவேல் இயக்கியுள்ளார்.