நேர்மையான போலீஸ் அதிகாரி லூதர், ஒரு வழக்கில் பெரும்புள்ளிகள் சிலரை எதிர்க்கிறார். இதையடுத்து சதிவலை பின்னி அவரை ஜெயிலுக்கு அனுப்புகின்றனர். லூதர் சிறையில் இருக்கும்போது, நகரத்தில் பலர் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர். ஆன்லைனில் தவறு செய்பவர்களைக் குறிவைத்து மிரட்டி கடத்துகின்றனர். பிறகு அவர்களைக் கொல்கின்றனர் அல்லது தற்கொலை செய்ய வைக்கின்றனர். இவை அனைத்தையும் ஒரு சைக்கோ கில்லர் செய்கிறான். அவனுக்கும், லூதருக்கும் பழைய கணக்கு பாக்கி இருக்கிறது. இதனால், சிறையில் இருந்து தப்பிக்கும் லூதர், பிறகு சைக்கோ கொலைகாரனை வேட்டையாட கிளம்புகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
நெட்பிளிக்ஸ் தளத்துக்காகவே தயாராகியுள்ள பரபரப்பான ஆக்ஷன் படம் இது. கதை புதிதில்லை என்றாலும், மேக்கிங்கில் மிரட்டியுள்ளார் இயக்குனர் ஜெம்மி பயன். லூதராக இத்ரிஸ் எல்பா நடித்து, தனியாளாக படத்தை தாங்கிப் பிடித்துள்ளார். இதுபோன்ற ஆக்ஷன் ஹீரோக்களுக்குப் பின்னால் குடும்ப சோகம் இருக்கும். அதுபோன்ற சோகம் அவருக்கும் உண்டு. சைந்தியா எரிவோ போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வில்லன் கடைசியாக போலீஸ் அதிகாரி மகளையே கடத்தும் வழக்கமான விஷயம் இதிலும் உண்டு. கிளைமாக்சில் பனிமலைகளுக்கு நடுவில் இருக்கும் வில்லனின் பங்களாவும், அதன் மர்மங்களும் ஜில்லிட வைக்கிறது. 130 நிமிட ஆக்ஷன் அனுபவத்தைக் கொடுத்துள்ளது படம்.