பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்திற்காக மேக்கப் போடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தங்கலான் படம் பூஜையுடன் துவங்கியதில் இருந்து கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வந்தது. இதனிடையில் ஷுட்டிங்கான ஒத்திகையின் போது எதிர்பாராத விதமாக விக்ரமுக்கு அடிப்பட்டது. இதனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, முழு ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து படக்குழுவினர் ஷுட்டிங்கை சிறிது காலம் தள்ளி வைத்தனர்.
தற்போது விக்ரம் பழைய நிலைக்கு திரும்பிய நிலையில் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சமூக பிரச்சனைகள் குறித்து பேசும் படங்களை இயக்கும் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பி இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் பார்வதி திருவோத்து, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்காக நீண்ட தலைமுடி, தாடி என வேறலெவல் லுக்கில் வலம் வருகிறார் விக்ரம். அதே போல் படத்தில் நடிக்கும் மற்றவர்களும் பழங்குடியினர் வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் ‘தங்கலான்’ படம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், இந்தப்படத்திற்காக மேக்கப் போடும் புகைப்படங்களை பகிர்ந்து, ‘நான் தினமும் நான்கு முதல் ஐந்து மணி நேரங்கள் மேக்கப் மற்றும் காஸ்டியூம் ஆகியவற்றிற்காக செலவழிக்கிறேன். அவ்வளவு நேரம் அசையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். ‘தங்கலான்’ படத்திற்காக அவர் இவ்வளவு தூரம் மெனக்கெடுவதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.