திருவனந்தபுரம்: மலையாள காமெடி நடிகர் மாமுக்கோயா (76), நேற்று மரணம் அடைந்தார். மலையாள பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர், மாமுக்கோயா. நாடக நடிகரான அவர், கடந்த 1979ல் ‘அன்யருடே பூமி’ படத்தில் அறிமுகமானார். பிறகு ‘காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட்’, ‘நாடோடிக்காற்று’, ‘பெருமழக்காலம்’, ‘வடக்கு நோக்கி எந்திரம்’, ‘பட்டனப்பிரவேசம்’, ‘மழவில்காவடி’ உள்பட 450க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘அரங்கேற்றவேளை’, ‘காசு’, ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’, ‘கோப்ரா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். பிரெஞ்சு மொழியிலும் நடித்துள்ளார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலப்புரம் மாவட்டம் காளிகாவு பகுதியில், கால்பந்து போட்டியை தொடங்கி வைக்க மாமுக்கோயா சென்றார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்தபோது, அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் மாமுக்கோயா மரணம் அடைந்தார்.