சென்னை: ஏ.எல்.விஜய் இயக்கிய ‘மதராசபட்டினம்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், பிரிட்டிஷ் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து ‘தாண்டவம்’, ‘ஐ’, ‘தங்கமகன்’, ‘கெத்து’, ‘தெறி’, ‘தேவி’ போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள அவர், தற்போது அருண் விஜய்யுடன் ‘மிஷன் சாஃப்டர் 1: அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோ என்பவரைக் காதலித்த எமி ஜாக்சன், அவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். 2019ல் எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு ஆண்ட்ரியாஸ் என்று பெயர் சூட்டினார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக ஜார்ஜ் பனயிட்டோவை விட்டு எமி ஜாக்சன் பிரிந்தார். பிறகு வேறொருவரை எமி ஜாக்சன் காதலித்தார். ஆனால், அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். தற்போது ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை எமி ஜாக்சன் காதலிக்கிறார். சமீபத்தில் இந்தியா வந்த அவர்கள், ஜெய்ப்பூர் உள்பட பல பகுதிகளை சுற்றிப் பார்த்தனர்.
அப்போது எமி ஜாக்சன் கூறுகையில், ‘தற்போது நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டுள்ளோம். எட் வெஸ்ட்விக் என் உணர்வுகளுடன் இணைந்தவர். விரைவில் நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறோம். தற்போது நான் விமானத்தில் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் பறந்து கொண்டிருக்கிறேன். நான் நடித்துள்ள ‘மிஷன் சாஃப்டர் 1: அச்சம் என்பது இல்லையே’ என்ற தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்து இந்திப் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. என் மகன் ஆண்ட்ரியாஸ் இந்த உலகத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவனை படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றேன். நான் எப்படி நடிக்கிறேன் என்பதை அவன் நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவனுக்கு நான் கடைசிவரை ஆதரவாக இருப்பேன்’ என்றார்.