பெல்கிரேட்: செர்பியாவில் சிட்டாடெல் வெப்சீரிஸ் படப்பிடிப்புக்காக சென்றுள்ளார் சமந்தா. செர்பியாவில் உள்ள பழமையான சர்ச் ஒன்றுக்கு சென்ற சமந்தா அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஒரு உருக்கமான பதிவையும் எழுதியுள்ளார். அவர் கூறுகையில், ‘மயோசிடிஸ் எனும் கொடிய நோயால் அவதிப்பட்டு வந்த நான் கடந்த ஒரு வருடம் எனது வாழ்க்கையே பெரிய போராட்டக்களமாக மாறியது. என் உடம்புக்குள்ளே பல போராட்டங்கள் நடைபெற்றன. சர்க்கரை, உப்பு மற்றும் பருப்பு வகைகள் கூட உட்கொள்ள முடியாத சூழ்நிலை, மாத்திரைகள் மட்டுமே உணவாக பல நேரங்களில் என்னை பாடாய் படுத்தியது.
ஓராண்டு கால பிரார்த்தனை, பூஜைகள், எந்தவொரு பரிசையும் எதிர்பார்த்து கடவுளை பிரார்த்திக்கவில்லை. மன வலிமைக்காகவும் அமைதிக்காகவும் தான் எனது பிரார்த்தனைகள் இருந்தன. சில சமயம் பெரிய வெற்றி என்பது அவசியமில்லை. முன்னோக்கி நகர்வதே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன். இப்போது படப்பிடிப்பில் இருக்கிறேன். மனதுக்குள் வலி இருந்தாலும் வலிமையாக என்னை தயார்படுத்தி வருகிறேன்’ என்றார்.