மும்பை: பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோன், தற்போது ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ என்ற வெற்றிப் படத்தில் நடித்து இருந்த அவர், தற்போது ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கும் ‘ஜவான்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இரண்டிலும் அவர் ஷாருக்கான் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் தீபிகா படுகோன், தனக்கு மிமிக்ரி கலை தெரியும் என்றும், தான் முன்னணி மிமிக்ரி கலைஞராக வேண்டும் என்று விரும்பியதாகவும், இதுநாள்வரை மறைத்து வைத்திருந்த ரகசியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: என்னை ஒரு புகழ்பெற்ற நடிகையாகப் பார்த்து வரும் ரசிகர்களுக்கு, எனக்கு மிமிக்ரி செய்யும் திறமை இருப்பது தெரியாது.
அதை நான் என் மனதிற்குள் ளேயே மறைத்து வைத்திருக்கிறேன். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு நான் முன்னணி மிமிக்ரி கலைஞராக வேண்டும் என்று நினைத்தேன். அந்த மிமிக்ரியை பொது மேடைகளில் மக்கள் முன்னால் செய்வதற்கு எனக்கு துணிச்சல் இல்லாத காரணத்தால், அக்கலையை மற்றவர்களிடம் இருந்து நான் மறைத்துவிட்டேன். ஆனால், வீட்டில் நான் தனிமையில் இருக்கும்போது மிமிக்ரி செய்து என் திறமையை பரிசோதித்துக் கொள்கிறேன். எனது கணவரும், பாலிவுட் நடிகருமான ரன்வீர் சிங்கும், எனது சகோதரியும் எனது மிமிக்ரி திறமையை நேரில் பார்க்கும் வாய்ப்பு பெற்றனர். மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது ரன்வீர் சிங் மாதிரி மிமிக்ரி செய்ய கற்றுக்கொள்கிறேன்.