சென்னை: விநய் பரத்வாஜ் எழுத்து மற்றும் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகைப்பூ கீதா, யாஷிகா ஆனந்த் நடித்திருக்கும் படம், ‘சில நொடிகளில்’. எஸ்குயர் புரொடக்ஷன்ஸ் யுகே மற்றும் புன்னகைப்பூ கீதா தயாரித்த இப்படம், வரும் 24ம் தேதி திரைக்கு வருகிறது. படம் குறித்து ரிச்சர்ட் ரிஷி கூறியதாவது: என்னைத்தேடி வந்த ஒரேமாதிரியான கதைகளை நிராகரித்து விட்டேன். மிகவும் வித்தியாசமான கதைகளில் நடிக்க காத்திருந்த நேரத்தில் விநய் பரத்வாஜ் சொன்ன கதை ஆங்கிலப் படத்தின் பாணியில் செம ஸ்டைலிஷாகவும், இந்தியக் கலாசாரத்தைப் பிரதிபலிப்பது போலவும் இருந்ததால் நடிக்க சம்மதித்தேன்.
படத்தில் நான் காஸ்மெடிக் சர்ஜனாகவும், யாஷிகா ஆனந்த் மாடல் அழகியாகவும் நடிப்பதால், காட்சிகள் அனைத்தும் லண்டனில் நடந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று, முழு படப்பிடிப்பையும் அங்கேயே நடத்தி முடித்தோம். நான், புன்னகைப்பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் சம்பந்தப்பட்ட கதையான இது, முதலில் முக்கோண காதல் கதை போல் பயணித்து, பிறகு மர்டர் மிஸ்ட்ரியாக மாறி, இறுதியில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் படம் முடியும். சில நொடிகளில் ஒருவனுடைய வாழ்க்கையில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது படத்தின் திரைக்கதை.