பெங்களூரு: பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை தரப்படுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 13ம் தேதி முதல் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், போராட்டக்காரர்களை தடுக்கும் விதமாக போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி, தடியடி நடத்தி வருகின்றனர். இந்த மோதலில் ஒரு இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஆடுகளம் கிஷோர் தனது இன்ஸ்டாகிராமில் ஆவேசத்துடன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் வெளியிட்டுள்ள இப்பதிவு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. காரணம், அவரும் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருபவர்தான்.
கிஷோர் வெளியிட்டுள்ள பதிவில், ‘விவசாயிகள் போராட்டத்தை தடுக்க சாலைகள் தோண்டப்பட்டன. சுவர்கள் எழுப்பப்பட்டன. குழிகள் வெட்டப்பட்டன. துப்பாக்கி குண்டுகள் புறப்பட்டன. கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடியின் அரசாங்கம் இவை அனைத்தையும் செய்தது. விவசாயிகள் இனியாவது தங்களுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவர்களது பக்தர்களுக்கும் உணவு வழங்குவதை நிறுத்த வேண்டும். இந்த நன்றி கெட்டவர்களுக்கு மட்டுமல்ல, தங்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் இவர்கள் தொடர்ந்து உணவளித்து வருகிறார்கள். இத்தனை கருணையுள்ள இவர்கள் தேசவிரோதிகளா?’ என்று கேட்டுள்ளார்.