விதார்த், ஆதித் அருண், மிஷ்கின், பூர்ணா, சுபஸ்ரீ ராயகுரு நடித்துள்ள படம், ‘டெவில்’. ராம், பூர்ணா, மிஷ்கின் நடித்த ‘சவரக்கத்தி’ படத்தை இயக்கியிருந்த ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். மாருதி பிலிம்ஸ், டச் ஸ்கிரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.ஹரி தயாரித்துள்ளனர். இப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் மிஷ்கின் கூறுகையில், ‘எனக்கு கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை கற்றுத்தரும் ராமமூர்த்தி குரு என்றால், இன்னொரு குரு இளையராஜா. பிறகு ஏன் நான் இசை அமைக்க வேண்டும்? அவருடன் சண்டை போட்டுவிட்டேன்.
எனக்கு அதிக கோபம் வரும். மீண்டும் அவரிடம் போய் நிற்க முடியாது. அதனால்தான் நானே இசை அமைக்கிறேன். இந்த இசைப்பயணத்தின் மூலம் நான் சேரும் இடம், இளையராஜாவின் காலடிகள். இவ்வுலகின் மிகப்பெரும் இசை ஆளுமைகள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான். அவர்கள்தான் இசை அமைப்பாளர்கள். நான் இல்லை. என்னைச் செதுக்கிய இயக்குனர்கள் கதிர், வின்சென்ட் செல்வா ஆகியோர் என் குருநாதர்கள். அவர்களிடம் இருந்து நான் உருவானேன். ஒரு கலைஞன் தன்னைப் பற்றிய விமர்சனங்களை கூர்மையாக கவனிக்க வேண்டும். அதை அலசி ஆராய்ந்து, அதில் உண்மை இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும்.
ஒரு படத்தில் இயக்குனரின் உழைப்பும், அறிவும் வெளிப்படையாக தெரிவது போல் இருந்தால் மட்டுமே அப்படம் ஓடும். இல்லை என்றால், அது எப்பேர்ப்பட்ட படமாக இருந்தாலும் ஓடாது. அதை மக்கள் நிராகரித்துவிடுவார்கள். படத்தைப் பாருங்கள். பிடிக்கவில்லை என்றால் ஒதுக்கிவிடுங்கள். என் சொந்த தம்பி ஆதித்யா இதைவிட நல்ல கதையுடன் மீண்டும் உங்களைத்தேடி வருவான்’ என்றார்.