கடந்த 2010ல் தொழிலதிபர் சந்தோஷ் மேனனை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலான நவ்யா நாயர், தற்போது சில மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில், சுங்கத்துறை கூடுதல் ஆணையர் சச்சின் சாவந்த், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், நவ்யா நாயருக்கு அவர் தங்க நகைகள் பரிசளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ்யா நாயரை நேரில் சந்திக்க சச்சின் சாவந்த் 8 முறை கொச்சி சென்றுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த நவ்யா நாயர், ‘சச்சின் சாவந்த் தனது பிறந்தநாளில் என் குழந்தைகளுக்கு தங்க நகைகள் பரிசளித்தார். அவர் குருவாயூர் கோயிலுக்குச் செல்ல நான் ஏற்பாடு செய்தேன். அவர் நண்பர் மட்டுமே’ என்றார். இப்பிரச்னை காரணமாக நவ்யா நாயரை அவரது கணவர் சந்தோஷ் மேனன் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதை மறுத்த நவ்யா நாயர், தனது கணவர், மகன் மற்றும் மாமியாருடன் சேர்ந்திருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டு, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.